கந்தர் அந்தாதி - செய்யுள் 95
திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே
பதம் பிரித்த வடிவம்:
திறவு ஆ அனக புரி வாசல் நீக்க சிகரி நெஞ்சம்
திறவு ஆ வனச முனியை வென்றோய்! தென்திசை
(திருச்செந்) தில் தவா வன மயிலோய்! அந்தக் காலம் என் சிந்தை வைக்க
திறவாவன நின் திருவான தண்டை திருவடியே
பொருள்:
திறவு ஆ அனக புரி வாசல் நீக்க
அனக புரி - பாபமற்ற கயிலாயத்தின்
வாசல் நீக்க - கதவைத் திறப்பதற்கு
திறவு ஆ - திறவுகோல் ஆனவனே
பாபமற்ற கயிலாயத்தின் கதவை திறப்பதற்கு திறவுகோல் ஆனவனே!
சிகரி நெஞ்சம் திறவு - கிரௌஞ்ச கிரியின் மார்பு பிளக்கும்படிச் செய்து
ஆ - ஆச்சரியமான விதத்தில்
வனச முனியை வென்றோய்!
வனச முனியை - தாமரையில் வாழும் பிரமனையும்
வென்றோய் - ஜெயித்தவனே!
தாமரையில் வாழும் பிரமனையும் ஜெயித்தவனே!
தென்திசை திருச்செந்தில் தவா வன மயிலோய்!
தென்திசை - தெற்கு திசையில் உள்ள
திருச்செந்தில் - திருச்செந்தூர்ப் பதியை விட்டு
தவா - நீங்காமல் அமைந்து அருளுகின்ற
வன மயிலோய் - அழகிய மயில்வாகனத்தை உடையவனே!
தெற்கு திசையில் உள்ள திருச்செந்தூரை விட்டு நீங்காமல் அமைந்து அருளுகின்ற அழகிய மயில் வாகனத்தை உடையவனே!
அந்தக் காலம் என் சிந்தை வைக்க
அந்தக் காலம் - என் உடல் அழியும் அந்தக் கடைசி காலத்தில்
என் சிந்தை வைக்க - என் மனதை ஒரு வழிப்படுத்த
என் உடல் அழியும் அந்த இறுதி நேரத்தில் என் மனதை ஒரு வழிப்படுத்த
திறவாவன நின் திருவான தண்டை திருவடியே
திறவாவன - அடைக்கல ஸ்தானம் எதுவென்றால்
நின் திருவான தண்டை திருவடியே - உனது தண்டை அணிந்த திருத்தாள்களே.
அடைக்கல ஸ்தானம் எதுவென்றால் உனது தண்டை அணிந்த திருத்தாள்களே.
பொழிப்புரை:
சிவகதி அடைவதற்கு கயிலாயத்தின் திறவுகோலாய் இருப்பவனே! கிரௌஞ்ச கிரியை அழித்தவனே! பிரமனைச் செற்றவனே! செந்திலில் சதாகாலமும் விளங்கும் மயில் வாகனனே! என் உடல் அழியும் அந்தி காலத்தில் என் மனது தண்டை அணிந்த உன் திருவடியில் அடைக்கலம் அடைய வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment