கந்தர் அந்தாதி - செய்யுள் 48

சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்


சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே


பதம் பிரித்த வடிவம்:


“சேய அன்பு உந்தி வன வாச மாதுடன் சேர்ந்த செந்தில்

சேய! வன்பு உந்து இகல் நிசாசராந்தகா! சேந்த!” என்னில்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாறவே தரும் சேதம் இன்றே


பொருள்:


சேய அன்பு உந்தி வன வாச மாதுடன் சேர்ந்த செந்தில் சேய!


சேய - அழகுடனும்

அன்பு – மிகுந்த காதலுடனும்

உந்தி – கானாறு பாய்கின்ற

வனவாச மாதுடன் – வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளியுடன்

சேர்ந்த செந்தில் சேய! – கந்தர்வ மணம் புரிந்துகொண்ட செந்தில் குமரனே!


அழகும் காதலும் உடையவளும் கானாறு பாயும் வள்ளிமலையில் வாழ்பவளுமான வள்ளியை கந்தர்வ மணம் புரிந்துகொண்ட செந்தில் குமரனே!


வன்பு உந்து இகல் நிசாசராந்தகா!


வன்பு உந்து – மிக்க வலிமையும்

இகல் நிசாசராந்தகா – பகைமையும் உடைய அசுரர்களை அழித்தவனே! (அரக்கர்களுக்கு யமனாக வந்தவனே!)


வலிமையும் பகைமையும் உடைய அசுரர்களை அழித்தவனே!

சேந்த! – செந்நிறமுடையவனே!


என்னில் – என்றெல்லாம் துதித்தால்


சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன் சேயவன்


சேயவன் - செவ்வாய்

புந்தி - புதன்

பனிப்பானு - சந்திரன்

வெள்ளி - சுக்கிரன்

பொன் - வியாழன்

செங்கதிரோன் - சூரியன்

(செங்கதிரோன்) சேயவன் – சூரியனுடைய பிள்ளையான சனைச்சரன்


(ஆகியோரின் வக்கிரத்தால்)


புந்தி தடுமாறவே தரும் சேதம் இன்றே - நமது சித்தத்தைத் தடுமாறச் செய்யும் தீமை இல்லாது போகும் 


[ராகு, கேது இரண்டும் சாயாக்ரஹங்கள் என்பதால் இங்கு குறிப்பிடப்படவில்லை]


பொழிப்புரை:


“வள்ளியை மணந்த செந்தில் குமரனே! அசுரர்கள் குலாந்தகனே! சேந்தனே!” என்று முருகப்பெருமானைத் துதித்தால், நவக்கிரஹங்களால் ஏற்படும் தீமை நம்மை அணூகாது.


பின் குறிப்பு:


“வேயுறு தோளி பங்கன் … அடியாரவர்க்கு மிகவே!” என்று வரும் கோளறு பதிகத்தை ஒத்த கருத்தினை உடைய இச்செய்யுள் தினசரி பாராயணத்திற்கு உரியதாகும்

Comments