கந்தர் அந்தாதி - செய்யுள் 74
சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்
சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்
சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே
பதம் பிரித்த வடிவம்:
சேரப் பொருப்பு அடவித் தேன் இறைவன்; திரை சிறையைச்
சேர் அப்பு ஓர் உப்பு அட வல்லவன்; சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப் பட வென்று அண்டர் ஏத்திய சேவகன்; வான்
சேர் அப்பு ஒருப்பட வேணியில் சேர்த்தவன் செய் தவமே
பொருள்:
சேரப் பொருப்பு அடவித் தேன் இறைவன்
சேர – சேர ராஜனின் ஆளுகைக்குட்பட்ட
பொருப்பு – கொல்லிமலையையும் வெள்ளிமலையையும் போன்ற
அடவி – வள்ளிமலைக் காட்டில் வாழ்கின்ற
தேன் – இனிய மொழிகளை உடைய வள்ளிநாயகியின்
இறைவன் – காதலனே!
சேரனின் ஆட்சிக்கு உட்பட்ட கொல்லிமலையையும் வெள்ளிமலையையும் போன்ற வள்ளிமலைக்காட்டில் வாழ்கின்ற இனிய மொழிகளை உடைய வள்ளியின் நாயகனே!
திரை சிறையைச் சேர் அப்பு ஓர் உப்பு அட வல்லவன்;
திரை – அலையானது
சிறையை – கடற்கரையை
சேர் அப்பு – அழிக்கும்படி மோதுகின்ற
ஓர் உப்பு – ஒப்பற்ற உப்புக் கடலை
அட வல்லவன் – வற்றும்படி வேலைப் பிரயோகித்த சாமர்த்தியனே!
கரையை அழிக்கும்படி மோதுகின்ற அலைகளை உடையதும், உப்பு நிறைந்ததும், ஒப்பற்றதுமான கடலை வற்றச்செய்த வேலேந்திய சமர்த்தனே!
சூரைச் சிகரியுடன் சேரப் பொருப் பட வென்று அண்டர் ஏத்திய சேவகன்
சூரை – சூரனை
சிகரியுடன் – கிரவுஞ்சகிரியுடன்
சேர – அடியோடு
பொரு - போர் செய்து
பட – அழியும்படி
வென்று – ஜெயித்து
அண்டர் ஏத்திய – தேவர்களால் துதிக்கப்பட்ட
சேவகன் – மஹாவீரனே!
சூரபத்மனை, அவனுக்குக் கவசமாய் விளங்கிய கிரௌஞ்ச கிரியோடு சேர்த்து அழித்து வென்று, தேவர்களால் துதிக்கப்பட்ட மாவீரனே!
வான் சேர் அப்பு ஒருப்பட வேணியில் சேர்த்தவன் செய் தவமே
வான் சேர் அப்பு - ஆகாச கங்கையை
ஒருப்பட – ஒன்றாக
வேணியில் – சடைமேல்
சேர்த்தவன் – அடக்கி தரித்த பரமசிவன்
செய் தவமே – செய்த தவத்தால் அவதாரம் செய்தவனே!
சிரத்தில் கங்கையைத் தரித்த ஈசன் செய்த தவத்தால் அவதரித்தவனே!
பொழிப்புரை:
கொல்லிமலை, வெள்ளிமலை போன்ற வள்ளிமலையில் வாழ்கின்ற வள்ளி நாயகியின் மணாளனும் கடலை வேலினால் வற்றும்படிச் செய்தவனும் சூரனையும் கிரௌஞ்ச கிரியையும் அடியோடு அழித்து, தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய மாவீரனே! கங்காதரராகிய சிவபெருமான் செய்த தவத்தின் பயனாய் அவதரித்தவனே.
.jpg)
Comments
Post a Comment