கந்தர் அந்தாதி - செய்யுள் 72

தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்

தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்

தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்

தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே

 

பதம் பிரித்த வடிவம்:

தீட்டப் படா இனி உன்னால் என் சென்னி. கறைப் பிறப்பில்

தீட்டப் படு ஆவியவர் அல்லன் யான். திக்கு நான் மருப்பு

தீட்டு அப் படா வித முக அசலன் சிறை விட்டவன் தாள்

தீட்ட படா இவனையே நினைவன் திசாமுகனே.

 

பொருள்:

தீட்டப் படா இனி உன்னால் என் சென்னி [திசாமுகனே]

திசாமுகனே – ஏ! நான்முகனே!

இனி உன்னால்இனிமேல் உன்னால்

என் சென்னி - என் தலைமேல்

தீட்டப் படா – விதியாகிய லிபியை எழுத வேண்டிய வேலை இல்லை

 

நான்முகனே! இனிமேல் உனக்கு என் தலைமேல் விதியை எழுதும் வேலை இல்லை.

 

கறைப் பிறப்பில் தீட்டப்படு ஆவியவர் அல்லன் யான்

கறைப் பிறப்பில் – ரத்தம் முதலான கறைகள் சேர்ந்த கர்ப்பத்தில் உண்டாகும் ஜனனத்தில்

தீட்டப்படு – அருவருப்பு அடைந்திருக்கின்ற

ஆவியவர் – மற்ற ஜீவன்களைப் போல

அல்லன் யான் – நான் ஆகமாட்டேன்

 

ரத்தம் முதலான கறைகள் சேர்ந்த கர்ப்பத்தில் உண்டாகும் மற்ற ஜீவன்களைப் போல் அல்லன் நான்.


(ஏனெனில்)

 

திக்கு நான் மருப்பு தீட்டு அப் படா வித முக அசலன் சிறை விட்டவன் தாள் தீட்ட படா இவனையே  நினைவன் 

திக்கு – எல்லாத் திக்குகளிலும்

நான் மருப்பு – தன்னுடைய நான்கு கொம்புகளையும்

தீட்டு – கூர்மை செய்கின்றதும்

அப் படா – அம் முக படாங்களையும்

வித – அதிலுள்ள விசித்திர எழுத்துக்களையும் கொண்ட

முக – முகத்தை உடைய

அசலன் – மலை போன்ற ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின்

சிறைவிட்டவன் – சிறையை மீட்ட கந்தக் கடவுளின்

தாள் தீட்ட – திருவடிகளை அடைய

படா இவனையே – என்றும் அழிவற்ற இந்த தெய்வத்தையே

நினைவன் – உள்ளத்தில் தியானித்திருக்கிறேன்

 

நான்கு திக்குகளிலும் கூர்மை செய்யப்படுகின்ற நான்கு தந்தங்களையும், முக படாங்களையும். புள்ளிகளையும் கொண்ட முகத்தையுடையதும் மலை போன்றதுமான ஐராவதத்தை வாகனமாய்க் கொண்ட இந்திரனின் சிறையை உடைத்த கந்தப் பெருமானின் திருவடிகளை அடைய அவனையே உள்ளத்தில் தியானித்திருக்கிறேன்.


பொழிப்புரை:

பிரம்மனே! ரத்தம் முதலிய அசுத்தம் நிறைந்த கருப்பையில் பிறந்து அழிவோரைப் போல என்னையும் நினையாதே. இந்திரனின் சிறையை விலக்கிய கந்தப் பெருமானின் திருவடித் தாமரையை அடையும் பொருட்டு அவரையே தியானித்துக் கொண்டிருக்கிறேன். ஆதலால் எனது தலையில் உன்னால் விதி எழுத்தை வரைய முடியாது. 

Comments