கந்தர் அந்தாதி - செய்யுள் 70

சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே

பதம் பிரித்த வடிவம்:

சிந்துர இத் தகவு ஆரும் புகர்முகத் தெய்வ வெள்ளைச்
சிந்துர வித்தக வல்லி சிங்கார! செந்தூர! குன்றம் 
சிந்து உர! வித்தக! முத்திக்கும் ஆய் நின்ற செல்வ! துஞ்சா
சிந்து ரவித் தகனம் போலும் இங்கு இளம் திங்களுமே.

பொருள்:

சிந்துர இத் தகவு ஆரும் புகர்முகத் தெய்வ வெள்ளைச் சிந்துர வித்தக வல்லி சிங்கார! 

சிந்துர – திலகம் தீட்டிய
இத் தகவு – இந்த அழகு
ஆரும் – நிறைந்திருக்கின்ற
புகர்முக – புள்ளியை உடைய முகம் பொருந்திய
தெய்வ வெள்ளைச் சிந்துர – தெய்விகமான ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவளும்
வித்தக – அற்புதமான அழகை உடையவளுமாகிய
வல்லி – கொடி போன்ற தேவயானைக்கு
சிங்கார – இன்பம் பயப்பவனே!

திலகம் தீட்டிய, அழகு நிறைந்த புள்ளிகள் பொருந்திய முகமுடைய தெய்விகமான ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவளும் அழகும் அற்புதமும் உடையவளும் கொடிபோன்றவளுமான தேவயானைக்கு இன்பத்தை அளிப்பவனே!

செந்தூர! – செந்திற்பதியானே!

குன்றம் சிந்து உர! 

குன்றம் – கிரௌஞ்ச கிரியை
சிந்து உர – சிதற அடித்த வலிமை உடையவனே!

கிரௌஞ்ச கிரியை சிதற அடித்த வலியவனே!

வித்தக! – ஞான மூர்த்தியே!

முத்திக்கும் ஆய் நின்ற செல்வ!முத்தி வீட்டை அடையச் செய்த குமரனே! அல்லது முத்திக்கு மூல காரணமாய் நின்ற செல்வனே!

துஞ்சா சிந்து ரவித் தகனம் போலும் இங்கு இளம் திங்களுமே

துஞ்சா சிந்து - கடல் ஓயாமல் முழங்குகிறது
இங்கு – இவ்விடத்தில்
இளம் திங்களுமே – பிறைச் சந்திரனும்
ரவித் தகனம் போலும் – சூரியனின் காந்தி போல் தகிக்கிறது

கடல் ஓயாமல் முழங்கும் இவ்விடத்தில், பிறைச்சந்திரனும் சூரியனின் காந்திபோல் தகிக்கிறது.

[இந்துவை சிந்துவை செய்வதென் யான்?கந்தர் அந்தாதி செய்யுள் 9]

[இமராஜனிலா அதெறிக்கும் கனலாலே
இளவாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமராகிய மாரன் எடுக்கும் கணையாலே
தனி மான் உயிர் சோரும் அதற்கொன்றருள்வாயே 
- திருவண்ணாமலைத் திருப்புகழ்]

பொழிப்புரை:

குங்குமம் தீட்டிய முகபடம் உடைய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின் மணாளனே! முத்திக்கு வித்தே! கிரௌஞ்ச மலையை அழித்த செந்திற்பதியானே! வித்தகனே! கடல் ஓயாமல் முழங்கியும், சந்திரன் வெப்பத்தைத் தந்தும், எனது விரகதாபத்தை அதிகரிக்கச் செய்வதை நீ ஆய்ந்து அருள்வாயாக!

Comments