கந்தர் அந்தாதி - செய்யுள் 66

சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ

சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு

சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு

சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே


பதம் பிரித்த வடிவம்:

சீகர சிந்து ரவுத்த வெஞ்சூர செய புய

(வ)சீகர சிந்துர வல்லி சிங்கார சிவசுத

(சு)சீ கர சிந்துர கந்தர வாகன் சிறைவிடும்

(சு)சீகர சிந்து உர மால் வினை குன்றை சிகண்டி கொண்டே.

 

பொருள்:

சீகர சிந்து ரவுத்த வெஞ்சூர செய

சீகர – அலைவீசும்

சிந்து – கடலின் கண்

ரவுத்த – பெரிய போர் வீரனான

வெம் சூர செய – கொடிய சூரபத்மனை ஜெயித்தவனே!

அலைவீசும் கடலிடத்தே போர் வீரனான சூரபத்மனை வென்றவனே!

 

புய வசீகர சிந்துர வல்லி சிங்கார 

புய வசீகர – உனது தோள்களை விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும்

சிந்துர – நெற்றியில் திலகம் தீட்டியவளும்

வல்லி – கொடி போன்றவளுமாகிய வள்ளியம்மைக்குரிய

சிங்கார – அழகு ஆபரணங்களை அணிந்தவனே!

உன்னுடைய தோள்களை விரும்புபவளும், நெற்றித் திலகம் அணிந்தவளும், கொடி போன்றவளுமான வள்ளியம்மைக்காக அழகிய ஆபரணங்களை அணிந்தவனே!


சிவசுதசிவகுமரனே!

 

சுசீ கரஅக்னியினால் கையில் ஏந்தப்பட்டவனே!

 

சிந்துர கந்தர வாகன் சிறைவிடும் சுசீகர 

சிந்துர – ஐராவதத்தையும்

கந்தர – மேகத்தையும்

வாகன் – வாகனமாகக் கொண்ட இந்திரன்

சிறைவிடும் – சிறையைக் களைந்த

சுசீகர – பரிசுத்த மூர்த்தியே!

ஐராவதத்தையும் மேகத்தையும் வாகனமாகக் கொண்ட இந்திரனின் சிறையைக் களைந்த தூயவனே!


சிந்து உர மால் வினை குன்றை சிகண்டி கொண்டே. 

உர – வலிமை மிக்க

மால் – மயக்கத்தைத் தருகின்ற

வினைக்குன்றை – இருவினைகளாகிய கல் மலையை

சிகண்டிகொண்டே – மயில் வாகனத்தில் வந்து / மயில் வாகனத்தை ஏவி

சிந்து – சிதற அடித்துவிடு

[படர் சக்ரவாளகிரி துகள்பட வையாளி வரு மயில் (மயில் விருத்தம்)]

வலியதும் மயக்கம் தரக்கூடியதுமான இருவினைகளாகிய கற்குன்றை, மயிலில் ஏறி வந்து அல்லது மயில் வாகனத்தை ஏவி, சிதற அடித்துவிடுவாயாக.


பொழிப்புரை:

சமுத்திரத்தில் ஒளிந்த சூரனை ஜெயித்தவனே! வள்ளி நாயகிக்காக அலங்காரம் புரிந்துகொண்ட அழகிய தோள்களை உடையவனே! சிவகுமரனே! அக்னியின் கைகளால் ஏந்தப்பட்டவனே! இந்திரனின் சிறையைக் களைந்த தூயவனே! நீ மயிலேறி வந்து என் பூர்வ வினையாகிய குன்றைப் பொடியாக்கிவிடு.


Comments