கந்தர் அந்தாதி - செய்யுள் 65

திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய

திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய

திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி

திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ்சீகரமே

 

பதம் பிரித்த வடிவம்: 

திகைப்பள் தங்கப் புயம் தந்தருளான் என்பள் திங்கள்

(நிய)தி கைப்பள் தம் கத்து அமையார் செந்திலார் என்பள் தென்னன்

(உய)தி கைப்பு அடங்க புகல் சேய் என்பள் கன்னி கண்ணீர் தர

(வி)தி கைப்படு அங்கத்து அமையாது எம் ஐ ஆட்கொளும் சீகரமே.

 

பொருள்:

திகைப்பள்[என் கன்னிப்பெண்] மயங்கி நிற்கிறாள்

தங்கப் புயம் தந்தருளான் என்பள் – தழுவி உயர் நிலை பெறும்படி, [செந்திலோன்] தனது திருத்தோள்களை எனக்குக் கொடுத்தருள மாட்டான் என்கிறாள்.

திங்கள் நியதி கைப்பள்

திங்கள் – சந்திரனை

நியதி கைப்பள் – (தினமும்) வெறுத்துப் பேசுகிறாள்

சந்திரனை நித்தமும் வெறுத்துப் பேசுகிறாள்.

தம் கத்து அமையார் செந்திலார் என்பள் – தான் இப்படி வருந்தி அரற்றுவதைக் கண்டும் செந்திலான் தன்னை மன்னித்து ரக்ஷிக்க மாட்டேன் என்கிறான் என்று கூறுகிறாள். 

தென்னன் உயதி கைப்பு அடங்க புகல் சேய் என்பள்

தென்னன் – கூன் பாண்டியன்

உயதி – சுர வருத்தத்தின்

கைப்பு அடங்க – வெப்பம் தணியும்படி

புகல் சேய் என்பள் – தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய சேய் என்பாள்

கூன் பாண்டியனின் சுரத்தின் வெப்பம் தணியுமாறு பதிகம் பாடி அருளிய சேய் என்பாள்.

கன்னி கண்ணீர் தர – என் பெண், கண்ணீர் மல்க 

விதி கைப்படு அங்கத்து அமையாது எம் ஐ ஆட்கொளும் சீகரமே

விதி கைப்படு – பிரமனின் கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற

அங்கத்து – உடலுக்குள்

அமையாது – இந்த ஆன்மா சேர்க்கப்பட்டு மீண்டும் பிறவி அடையாதபடி

ஆட்கொளும் – ஆண்டு கொள்ள வேண்டும்

எம் ஐ – என் சுவாமியே

சீகரமே – அழகிய குமரக்கடவுளே!

(என்று இறைஞ்சுகின்றாள்)

குமாரக்கடவுளே! என் சுவாமியே! பிரமனின் கையினால் மீண்டும் பிறவி அடையாதபடி என் பெண்ணை ஆட்கொண்டு அருள்வாயாக.


பொழிப்புரை:

அழகிய குமார சுவாமியே! என் உயிர்ப்பெண்ணானவள், செந்திலாண்டவன் என் குறைகளைத் தீர்ப்பானில்லை என்கிறாள்; கண்ணீருடன் சந்திரனையும் வெறுத்துப் பேசுகிறாள்; அவன் தனது திருத்தோள்களைத் தழுவத் தந்தானில்லை என்று ஏங்குகிறாள்; ஞானசம்பந்தனாகத் தோன்றி, கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்த அவன், என் விரக தாபத்தைத் தணிக்கின்றான் இல்லை என்கிறாள்; இனி இப்படிப்பட்ட பிறவியுற்று வருந்தாவகை அவளை ஆட்கொள்வாயாக.

Comments