கந்தர் அந்தாதி - செய்யுள் 64
சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி
சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே
பதம் பிரித்த வடிவம்:
சே அகம் மன்னு அமலர்க்கு ஓம் முன் நீ சொல, தெய்வ வள்ளி
சே அகம் அன்ன வதனாம்புய! கிரி செற்ற முழுச்
சேவக! மன்ன! திருஆவினன்குடிச் செல்வ! கல்விச்
சேவகம் அன்ன முனிக்கு எங்ஙன் நாணி திகைப்புற்றதே!
பொருள்:
தெய்வ வள்ளி சே அகம் அன்ன வதனாம்புய!
தெய்வ வள்ளி – தெய்விகம் பொருந்திய வள்ளியின்
சே அகம் அன்ன – கருணையினால் சிவந்த இதயத்தாமரை போல் விளங்கும்
வதனாம்புய – முகாரவிந்தம் உடையவனே!
வள்ளியின் இதயத்தாமரை போல் விளங்கும் முகம் உடையவனே!
கிரி செற்ற முழுச்சேவக!
கிரி செற்ற – கிரௌஞ்ச மலையை அழித்த
முழுச்சேவக - ஒப்பற்ற வீரனே!
கிரௌஞ்ச மலையை அழித்த சுத்த வீரனே!
மன்ன! – தலைவனே!
திருஆவினன்குடிச் செல்வ! – ஆவினன்குடியில் வாழ் குமரனே!
சே அகம் மன்னு அமலர்க்கு ஓம் முன் நீ சொல
சே அகம் மன்னு – ரிஷப வாகனத்தின் மேல் நிலைபெற்று விளங்கும்
அமலர்க்கு – குற்றமற்ற பரிசுத்தரான சிவபிரானுக்கு
ஓம் முன் நீ சொல – பிரணவத்தின் பொருளை முன்பு நீ உபதேசம் செய்ய
ரிஷபத்தின் மேல் விளங்கும் குற்றமற்ற பரிசுத்தரான சிவபிரானுக்கு, முன்பொரு நாள் பிரணவத்தின் பொருளை நீ உபதேசிக்க
கல்விச் சேவகம் அன்ன முனிக்கு எங்ஙன் நாணி திகைப்புற்றதே!
கல்விச் சேவகம் – வேதம் ஓதுவதில் வல்லமையும்
அன்ன – அன்ன வாகனமும் உடைய
முனிக்கு – பிரமனுக்கு
எங்ஙன் நாணி – எவ்விதத்தில் வெட்கம் ஏற்பட்டு
திகைப்புற்றதே – பிரணவப் பொருள் தெரியாமல் மயங்கி நின்றான்?
வேதம் ஓத வல்லவனும் அன்ன வாகனனுமான பிரமன் எதற்காக பொருள் தெரியாமல் வெட்கி நிற்க வேண்டும்?
பொழிப்புரை:
வள்ளியின் இதயக்கமலம் போன்று சிவந்த முகமுடையவனே! கிரௌஞ்ச கிரியை அழித்த வீரனே! ஆவினன்குடி ஆண்டவனே! நீ சிவபெருமானுக்கு உபதேசித்த பிரணவத்தின் பொருள் தெரியாமல் பிரமன் வெட்கமுற்று நின்றது ஏன்?
.jpg)
Comments
Post a Comment