கந்தர் அந்தாதி - செய்யுள் 61

 திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்

திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ

திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்

திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே

 

பதம் பிரித்த வடிவம்: 

திக்கர் அச திதவன் சென்று முன் “திதிகுமரர்

(வந்)திக்கு அர! சத்தி இடத்தோய்!  என் செய்வது?" என தரு

(நீ)தி கரசத்தி விதிர்த்திலையேல் எவன் செய்குவர்?

(அத்)திக்கு அரசு! அத்தி அலைவாய் வளர் நித்திலக் கொழுந்தே!

 

பொருள்:

அத்திக்கு அரசு! அத்தி அலைவாய் வளர் நித்திலக் கொழுந்தே!


அத்திக்கு அரசு – தெய்வயானையின் மணாளனே! 

அத்தி – சமுத்திரத்தின் கண் (அமைந்துள்ள)

அலைவாய் வளர் – செந்தூரில் விளங்கும்

நித்திலக் கொழுந்தே – முத்தின் கொழுந்தொளி போன்றவனே

தெய்வயானை நாயகனே! திருச்செந்தூரில் விளங்கும் முத்தொளி போன்றவனே!

 

திக்கர் அச திதவன் சென்று முன் “திதிகுமரர் வந்திக்கு அர! சத்தி இடத்தோய்!  என் செய்வது?" என 

முன் – முன்னொரு காலத்தில்

திக்கர் – அஷ்ட திக் பாலகர்களும்

அச திதவன் – ஆட்டை நிலையான வாகனமாகக் கொண்ட அக்னியும்

சென்று – சிவபெருமானிடத்தில் சென்று

அர – அரனே!

சத்தி இடத்தோய் – உமா தேவியை இடப் பாகத்தில் வைத்திருப்பவனே!

திதிகுமரர் – திதியின் பிள்ளைகளான சூரபத்மாதியர்களால்

வந்திக்கு – எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை

என் செய்வது? – எப்படித் தாங்கிப் பிழைப்போம்?

என – என்று முறையிடுகையில்

அஷ்ட திக் பாலகர்களும், அக்னியும் சிவபெருமானிடத்தில், முன்னொரு காலத்தில் சென்று, “அரனே! பார்வதியை இடப்பாகத்தில் கொண்டவனே! அசுரர்களால் இழைக்கப்படும் கொடுமைகளை நாங்கள் எப்படித் தாங்கிக்கொள்வது?” என்று முறையிடுகையில்..

 

தரு நீதி கரசத்தி விதிர்த்திலையேல் எவன் செய்குவர்?

தரு – அவர் உனக்களித்த

நீதி – அடியவர் துயரை நீக்குவதையே குறியாகக் கொண்ட

கர சத்தி – கர வேலாயுதத்தை

விதிர்த்திலையேல் – (சூரபத்மாதியர் மேல்) செலுத்தி அவர்களை அழித்திராவிடில்

எவன் செய்குவர்? – அத் தேவர்கள் எப்படிப் பிழைத்திருப்பார்கள்?

அவர் உனக்களித்த வேலாயுதத்தை, நீ சூரபத்மாதியர் மேல் செலுத்தி அவர்களை அழித்திராவிடில். தேவர்கள் எப்படிப் பிழைத்திருப்பார்கள்?


ஆராயு நீதி வேல்” (சீரான கோலகால – திருப்புகழ்) 

விதிர்த்தல் – அசைத்தல் (மலர்க்கமல கரத்தின் முனை விதிர்க்கவேல் வகுப்பு)


பொழிப்புரை:

தெய்வயானை மணாளனே! செந்திலில் வாழும் முத்தொளி போன்றவனே! தேவர்கள் முறையீட்டிற்கிரங்கி, பரமசிவன் உனக்குக் கொடுத்த வேற்படையைச் செலுத்தி அசுரர்கள் அனைவரையும் நீ அழித்திராவிடில், தேவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்?

Comments