கந்தர் அந்தாதி - செய்யுள் 58

 சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி

சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு

சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ

சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே

 

பதம் பிரித்த வடிவம்: 

சீலம் கனம் முற்று அபங்கா கரசலதீ ரக்க

(நி)சீ லங்கன முற்றம் முத்து ஊர் செந்தூர சிகண்டி

(அம் சு)சீ லங்கனம் உற்ற வேதனை மேவி தியங்கினம்

(சீ) சீ லங்கனம் முற்ற இப்பிறப்பூடு இனிச் சேர்ப்பது அன்றே.

 

பொருள்:

சீலம் கனம் முற்று அபங்கா

சீலம் – கொடைக்குணத்திலும்

கனம் – பெருமையிலும்

முற்று – மேம்பட்ட

அபங்க – குற்றமற்றவனே!


கொடையிலும் பெருமையிலும் மேம்பட்ட, குற்றமற்றவனே! 

கர சலதீ ரக்க நிசீ லங்கன

கர – கோபமுடைய

சலதீ – சமுத்திரத்தின்கண்

ரக்க – அசுரக் கூட்டமாகிய

நிசீ – இருளை

லங்கன – அழித்தவனே!

கோபமுடைய சமுத்திரத்திடத்தில் அசுரக் கூட்டமாகிய இருளை அழித்தவனே!

முற்றம் முத்து ஊர் செந்தூர

முற்றம் – முற்றம் போன்ற கடற்கரையின் கண்

முத்து ஊர் – முத்துக்கள் இறைந்து கிடக்கின்ற

செந்தூர – செந்திற்பதியோனே!

கடற்கரையில் முத்துக்கள் இறைந்து கிடக்கும் செந்திலாண்டவனே!

[ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் – கந்தர் அலங்காரம்]


சிகண்டி அம் சுசீ 

சிகண்டி – மயில் வாகனமுடைய

அம் – அழகிய

சுசீ – பரிசுத்தமானவனே!

மயில் வாகனமுடைய அழகிய பரிசுத்த மூர்த்தியே!


லங்கனம் உற்ற வேதனை மேவி தியங்கினம் 

லங்கனம் – பசியாகிய உதராக்னியினால்

உற்ற – ஏற்படும்

வேதனை மேவி – வருத்தத்தை அடைந்து

தியங்கினம் – மயங்குகின்றேன்.

பசியால் வருத்தம் அடைந்து மயங்குகின்றேன்.


சீ சீ 

சீசீ – இது மிகவும் இகழ்ச்சிக்கிடமானது.


லங்கனம் முற்ற இப்பிறப்பூடு இனிச் சேர்ப்பது அன்றே 

லங்கனம் முற்ற – முற்ற லங்கனம் – முற்றிலும் குற்றத்திற்குரிய

இப்பிறப்பூடு – இப்படிப்பட்ட பிறவியில்

இனிச் சேர்ப்பது அன்றே – இனிமேலும் என்னைக் கொண்டுபோய்த் தள்ளுவது நன்றன்று.

குற்றமுடைய இப்பிறப்பில் இனியும் என்னைச் சேர்ப்பது நன்றல்ல.


பொழிப்புரை:

குறைவில்லாதவனே! கடலின் கண் அசுரக் கூட்டத்தை மாய்த்தவனே! செந்திலாண்டவனே! மயில் வாகனனே! உதராக்னியைச் சமன்படுத்தும் பொருட்டு, வயிற்றுப் பிழைப்பிற்காக அற்றைக்கிரை தேடும் இகழ்ச்சியான இந்த ஜனனத்தை நான் மீண்டும் அடையாதபடி என்னைக் காப்பாற்றுவாயாக.

Comments