கந்தர் அந்தாதி - செய்யுள் 50

சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா

சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி

சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி

சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே


பதம் பிரித்த வடிவம்:

சித்திரம் இக்கனவு இல்வாழ்வு எனத் தெளியும்

(தவ வா)சித் திரம் இக்கன் நெறிக்கு அழிந்தேற்கு இனி செச்சை

(நல் வி)சித்திர மிக்க தன குறத் தோகை திறத்த

(முத்தி) சித்தி ரமிக்க அருளாய் பிறவிச் சிகை அறவே.


பொருள்:

சித்திரம் இக்கனவு இல்வாழ்வு எனத் தெளியும் தவ வாசித் திரம்

சித்திரம் – பொய்யாக உள்ள

இக் கனவு – நாம் காண்கின்ற கனவைப் போன்றது

இல்வாழ்வு – இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை


[பொய்யாக உள்ள இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை நாம் உறக்கத்தில் காணும் கனவைப் போன்றது]


எனத் தெளியும் – என்ற மனத்தெளிவை நல்கும்

தவ வாசித் திரம் – தவ வலிமையை நாடாமல்

இப்பிரபஞ்ச வாழ்க்கை, கனவைப் போன்றது என்ற மனத்தெளிவை நல்கும் தவத்தை நாடாமல்


இக்கன் நெறிக்கு அழிந்தேற்கு

இக்கன் – கரும்பு வில் கொண்ட மன்மதனுடைய

நெறிக்கு – காம நூல் வழியில்

அழிந்தேற்கு – கெட்டுப்போன எனக்கு


மன்மதனுடைய காமநூல் நெறியை நாடி, கெட்ட எனக்கு


இனி செச்சை நல் விசித்திர

(இனி – இனிமேலாவது)

செச்சை நல் விசித்திர! – வெட்சி மாலை அணிந்த சிறந்த, அற்புத அழகுடையவனே!


மிக்க தன குறத்தோகை திறத்த! – பெருத்த தன பாரமுடைய மயில் போன்ற வள்ளியின் மணாளனே!


முத்தி சித்தி ரமிக்க அருளாய் பிறவிச் சிகை அறவே

பிறவிச் சிறை அறவே – இப்பிறப்பாகிய பந்தம் நீங்க

முத்தி சித்தி – மோட்சப் பேறானது (இனிமேலாவது)

ரமிக்க அருளாய் – பரிபூரணமாகக் கிட்டும்படி எனக்கு அருள வேண்டும்.


வெட்சிமாலை அணிந்த அழகனே! வள்ளி நாயகனே! இப்பிறப்பாகிய பந்தம் நீங்க, இனியாவது, மோட்சப் பேற்றை நான் பெறும்படி எனக்கு அருள்வாய்.


பொழிப்புரை:

வெட்சிமாலை அணிந்த வள்ளி மணாளனே! இல்வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் புரிந்துகொள்ளாமல், சிற்றின்ப வழியில் காலம் கழித்த அடியேனுக்கு, இனிமேலாவது பிறப்பு இறப்பாகிய பந்தம் நீங்கும்படியும், முத்திவீடு கிட்டும்படியும் நல்லுபதேசம் செய்வாயாக.

Comments