கந்தர் அந்தாதி - செய்யுள் 44
சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்
சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்
சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே
பதம் பிரித்த வடிவம்:
சேது ஆம் பலதுறை வேறும் பணி கங்கை செல்வ! நந்தன்
சே தாம்பு அலது உறையாத சிற்றாயன் திருமருக!
சேது ஆம்பலது உறை செவ்வாய்க் குறத்தி திறத்த!
(முத்திச்) சே தாம் பலதுறை ஈதென்று எனக்கு உபதேச நல்கே
பொருள்:
சேது ஆம் பலதுறை வேறும் பணி கங்கை செல்வ!
சேது ஆம் - சேது முதலிய
பலதுறை வேறும் - மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும்
பணி - வணங்குகின்ற
கங்கை செல்வ! - கங்காதேவியின் மைந்தனே!
நந்தன் சே தாம்பு அலது உறையாத சிற்றாயன் திருமருக!
நந்தன் சேய் - நந்தகோபாலனின் பாலனாய் அவதரித்து
தாம்பு அலது - வெண்ணெய் திருடனாய் யசோதையால் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றாலன்றி
உறையாத - வேறெதற்கும் கட்டுப்படாத
சிற்றாயன் - சிறு இடையனாகிய கிருஷ்ணமூர்த்தியின்
திருமருக! - செல்வ மருமகனே!
சேது ஆம்பலது உறை செவ்வாய்க் குறத்தி திறத்த!
சேது - சிவந்த
ஆம்பலது - ஆம்பல் பூ நிறம் போலும்
உறை - உற்ற
செவ்வாய் - சிவந்த வாயை உடைய
குறத்தி திறத்த! - வள்ளி மணாளனே!
முத்திச் சே தாம் பலதுறை ஈதென்று எனக்கு உபதேச நல்கே
முத்திச் சே - மோக்ஷத்திற்கும் எனக்கும் இடையே உள்ள பெரிய தூரத்தை
தாம் - தாண்டக்கூடிய
பலதுறை - நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய மார்க்கம்
ஈதென்று - இதுவே என்று
எனக்கு உபதேச நல்கே - எனக்கு நீ உபதேசம் செய்வாயாக.
பொழிப்புரை:
கங்கையின் மைந்தனே! திருமால் மருகனே! வள்ளி நாயகனே! எதற்கும் தூரமாய் இருக்கின்ற முத்தி வீட்டை அடையும் நல்வழியை நீ எனக்கு உபதேசிக்க வேண்டும்.
.jpg)
Comments
Post a Comment