கந்தர் அந்தாதி - செய்யுள் 43

செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்

செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்

செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்

செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே


பதம் பிரித்த வடிவம்:

செய்ய செம் தாமரை இல்லாது அ மாதுடன் செந்தினைசூழ்

செய் அசெம் தா மரை மான் ஆர் சிலம்பில் கலந்துறையும்

செய்ய! செம் தாமர் ஐ என்னும் குமார! சிறு சதங்கை

செய்ய செந்தாமரை சேர்வது என்றோ? வினை சேய் தொலைத்தே


பொருள்:

செய்ய செம் தாமரை இல்லாது அ மாதுடன்

செய்ய - தினை விளையும் நிலத்தை உடைய

செம் - ஒழுங்கான

தாமரை - சிறுகுடி எனும் நகரத்தாருக்கு

இல்லாது - தெரியாமல்

அ மாதுடன் - அந்தத் தினைப்புனத்தில் காவல் செய்த வள்ளி நாயகியுடன்


செந்தினைசூழ் செய் அசெம் தா மரை மான் ஆர் சிலம்பில் கலந்துறையும் செய்ய!

செந்தினை சூழ் செய் - சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த

அசெம் - ஆடு

தா மரை - தாவுகின்ற கடம்பை எனும் மான் கூட்டம்,

மான் - மற்றும் வேறு ஜாதி மான்கள்

ஆர் - நிரம்பி இருக்கும்

சிலம்பில் - குன்றில்

கலந்துறையும் - அவளைக் கந்தர்வ மணம் செய்து கொண்ட

செய்ய! - கந்தக் கடவுளே!


செம் தாமர் ஐ என்னும் குமார!

செம் தாமர் - அழகிய கொன்றை மாலையைத் தரித்துள்ள சிவபெருமான்

ஐ என்னும் குமார! - ஐயனே என்று போற்றுகின்ற குமாரக் கடவுளே!


சிறு சதங்கை செய்ய செந்தாமரை சேர்வது என்றோ? வினை சேய் தொலைத்தே

சிறு சதங்கை - சிறிய சதங்கை அணிந்த

செய்ய - அழகிய

செந்தாமரை - சிவந்த திருவடித்தாமரை

சேர்வது என்றோ? - நான் அடைவது எக்காலம்?

வினை சேய் தொலைத்தே - இருவினைகளையும் தொலைவில் நீக்கிவிட்டு


பொழிப்புரை:

மலைக் குறவருக்குத் தெரியாமல், தினைப்புனத்தில் வள்ளியைப் புணர்ந்தவனே! கொன்றை வேந்தராகிய ஈசனார், ஐயனே என்று துதிக்கின்ற குமரனே! இருவினைப் பரப்பைக் கடந்து உன் திருவடியை நான் அடையும் காலம் என்றைக்கு வருமோ?

பின் குறிப்பு:

முருகன் திருவடியைக் கூடுதற்கு விரும்புதல் –

  • ‘உய்யும் வகை அறியேன் மலர்த்தாள் தருவாய்’ – கந்தர் அலங்காரம் 41
  • ‘தண்டையம் புண்டரிகம் தருவாய்’ – கந்தர் அலங்காரம் 92
  • ‘இருதாள் வனசம் தர என்றிசைவாய்’ – கந்தர் அநுபூதி 21
  • ‘கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்’ – கந்தர் அநுபூதி 35

Comments