கந்தர் அந்தாதி - செய்யுள் 34

திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்

திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்

திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்

திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே


பதம் பிரித்த வடிவம்:

திரிகை இலாய் இரவு எல் ஆழி மண் விண் தரு

(சிரபாத்)திரி கையிலாயி ரவு ஆநந்த நாடகி சேர்

(இமகோத்)திரிகையில் ஆயி ரமிக்கும் மைந்தா செந்திலாய் ஒருகால்

திரிகையில் ஆயிரக் கோடி சுற்றோடும் திருத்து உளமே

 

பொருள்:

திரிகை இலாய் – மாறுபடாத நித்யனே!


இரவு எல் ஆழி மண் விண் தரு சிரபாத்திரி 

இரவு – ராத்திரி

எல் – பகல்

ஆழி – சமுத்திரம்

மண் - பூமி

விண் – விண்ணுலகம்

தரு – இவற்றை எல்லாம் படைத்த பிரம்மனின்

சிரபாத்திரி – கபாலத்தைக் கையில் ஏந்தியவரும்


கையிலாயி – கயிலாய நாதரும்


ரவு ஆநந்த நாடகி சேர் 

ரவு – ஆரவாரம் மிகுந்த

ஆநந்த நாடகி – ஆனந்த நடனம் செய்பவருமாகிய சிவபெருமானுக்கு

சேர் – இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும்


இமகோத்திரிகையில் ஆயி ரமிக்கும் மைந்தா 

இமகோத்திரிகையில் – இமயமலையிடத்தில் உற்பவித்து வளர்ந்த

ஆயி – தாயாகிய பார்வதிக்கும்

ரமிக்கும் – மகிழ்வைத் தருகின்ற

மைந்தா – புதல்வனே!


செந்திலாய் – செந்தில் பதியோனே!


ஒருகால் திரிகையில் ஆயிரக் கோடி சுற்றோடும் 

ஒருகால் திரிகையில் – குயவனின் சக்கரம் ஒருமுறை சுற்றி வரும் முன்

ஆயிரக் கோடி சுற்றோடும் – எண்ணற்ற முறை சுற்றிவரும்


திருத்து உளமே 

உளமே – என் உள்ளத்தை

திருத்து – திருத்தியமைத்து அமைதியைத் தந்தருள்க


பொழிப்புரை:

நித்தியமானவனே! சராசரங்களைப் படைத்த பிரமனின் தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், ஆனந்த நடனம் புரிந்து கயிலையில் உறைகின்றவருமான பரமசிவனுக்கும், இமயமலையின் குமாரியாகிய பார்வதி தேவிக்கும் மைந்தனே! திருச்செந்திற்பதியோனே!  என் உள்ளமானது, குயவனின் சக்கரம் ஒரு தரம் சுற்றுவதற்குள் அநேக கோடி தரம் சுற்றி வருகின்றது. அதை அடக்கியருள வேண்டும்.


குலாலன் திகிரி வருமொரு செலவினில் எழுபது செலவு வரு மன பவுரி கொடலமரு திருகன் – [பகிர நினைவொரு – பொதுத் திருப்புகழ்]

Comments