கந்தர் அந்தாதி - செய்யுள் 33

சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்

சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத

சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே

சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே


பதம் பிரித்த வடிவம்:

சே தனம் தந்து உறு ஐ என்று உமை செப்பும் குருந்து உறை

(காற்)சேது அனம் தந்து உறை அல்லி மன் வாவிச் செந்தூர் கருது

(அ)சேதனம் தம் துறை என்று அறியார் திறம் நீங்கி நெஞ்சே

சேது அநந்தம் துறை மற்றும் உற்றாடித் திரிகைவிட்டே


பொருள்:

சே தனம் தந்து உறு ஐ 

சே - அழகிய

தனம் தந்து – திருமுலைப்பால் ஊட்டி

உறு ஐ - பெரும் பாக்கியம் கிடைத்த என் ஐயன்


என்று உமை செப்பும் குருந்து உறை 

என்று உமை செப்பும் - என்றெல்லாம் பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற

குருந்து உறை – குழந்தை நீங்காமல் வசிக்கின்றதும்

 

காற்சேது அனம் தந்து உறை அல்லி மன் வாவிச் செந்தூர் கருது 

காற்சேது அனம் – சிவந்த காலை உடைய அன்னப் பட்சிகளும்

தந்து உறை அல்லி – நூல் போன்ற தண்டுடைய ஆம்பல் பூக்களும்

மன் வாவி – அகலாதிருக்கின்ற தடாகங்கள் சூழ்ந்ததுமான

செந்தூர் கருது – திருச்செந்திற்பதியை நீ சிந்தை செய்வாயாக

 

அசேதனம் தம் துறை என்று அறியார் திறம் நீங்கி

அசேதனம் - அறிவின்மை

தம் துறை - தங்கள் சமயக் கோட்பாடுகள்

என்று அறியார் திறம் நீங்கி - என்று தெளியாமல் உழலும் பரசமயவாதிகளின் கூட்டத்தை நீங்கி


நெஞ்சே – மனமே! 


சேது அநந்தம் துறை மற்றும் உற்றாடித் திரிகைவிட்டே - சேது முதலான மற்ற சமுத்திரங்களிலும் அநேக நதிகளிலும் மீண்டும் மீண்டும் சென்று நீராடுவதை விடுத்து [செந்தூர் கருது, மனமே!]


பொழிப்புரை:

நெஞ்சமே! தங்கள் சமயக் கோட்பாடுகள் அறிவின்மையானவை என்று உணராத பரசமயவாதிகளுடன் சேராமலும், தீர்த்தாடனத்தில் மட்டுமே நேரத்தைச் செலுத்தாமலும், உமை பாலகனான கந்தக் கடவுளின் சாந்நித்தியத்துடன் இருக்கும் செந்தூரைத் தியானிப்பாயாக.

[ஆன்மிக மார்க்கத்தின் முக்கியப் படிகளான க்ஷேத்ராடனம், புண்ணிய நதிகளில் நீராடுவது, இவையெல்லாம் பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் தேவையில்லை. அவற்றை விட்டுவிட்டு, முருகன், அசுர ரூபத்திலிருந்த மும்மலங்களையும் அழித்த செந்தூரையும் அவன் அங்கு நடத்திய திருவிளையாடல்களையும் தியானம் செய்ய வேண்டும்.]

Comments