கந்தர் அந்தாதி – செய்யுள் 32

சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்

சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்

சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா

சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே


பதம் பிரித்த வடிவம்:

சித்திக்க; தத்துவ! ருத்திர பாலக! செச்சை

(குறிஞ்)சித் திக்க! தத்து உவர் அத்தியில் மா வென்ற சேவக!

(இச்)சித்து இக்கத்து அத்துவர் வாய்மொழி மாதர்க்கு எனும் திணை

(வா)சித்து இக்கத்தத்து வருத்தப்படாது நற்சேதனமே


பொருள்:

முருகனைப் பலவாறாக அழைத்து, தனக்கு மெய்யறிவு கிடைக்க வேண்டும் என்று இப்பாடலில் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.


சித்திக்க – அடியேனுக்குக் கிட்ட அருள் பாலிப்பாயாக

தத்துவ – தத்துவ சொரூபியே

ருத்திர பாலக – ஈசன் மைந்தனே 

செச்சை குறிஞ்சி திக்க – வெட்சி மாலை அணிந்த குறிஞ்சி நில இறைவனே!


தத்து உவர் அத்தியில் மா வென்ற சேவக 

தத்து உவர் அத்தியில் – அலைகள் வீசும் உப்பு மயமான சமுத்திரத்தில்

மா வென்ற சேவக – மாமரமான சூரபத்மாவை வென்ற வீரனே!


இச்சித்து இக்கத்து அத்துவர் வாய்மொழி மாதர்க்கு எனும் திணை வாசித்து 

இச்சித்து – மிகுந்த விருப்பமுடன்

இக்கத்து – கரும்பும்

அத்துவர் – அந்தச் சிவந்த பவளமும்

வாய் மொழி மாதர்க்கு – மாதர்க்கு வாயும் மொழியும் ஆகும் (கரும்பை ஒத்த மொழியும், பவளம் போன்ற வாயும் உள்ளன) (முரண் நிரல் நிறை அணி)

எனும் திணை வாசித்து – என்று விவரிக்கும் காம நூல்களை ஓயாமல் வாசித்து


இக்கத்தத்து வருத்தப்படாது நற்சேதனமே 

இக்கத்தத்து – அதனுடன் சேர்ந்த கோபத்தினாலும்

வருத்தப்படாது – நான் ஒழியாத துன்பம் அடையாதபடி

நற்சேதனமே – நல்ல மெய்யறிவு

(சித்திக்க அடியேனுக்கு கிட்ட வேண்டும்)


பால் என்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை

வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்

கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?

(கந்தர் அலங்காரம் 30)

பொழிப்புரை:

தத்துவ சொரூபியே! சிவகுமரனே! வெட்சி மாலை அணிந்த மலை அரசே! கடலில் சூரனாகிய மாமரத்தை அழித்த வீரனே! மாதர்கள் அழகை வர்ணிக்கும் காம நூல்களைப் படிக்காமலும், அதனுடன் சேர்ந்து கோபத்தினால் நான் துன்புறாமலும் எனக்கு மெய்யறிவு கிட்டும்படி நீ அருள் புரிய வேண்டும்.  

 

பின் குறிப்பு:

·        பத்து கந்தர் அந்தாதிச் செய்யுள்களில் மாமரமாய் நின்ற சூரனை அட்ட குறிப்புகள் வருகின்றன.

·         கடை சிவந்து எனத் தொடங்கும் பொதுத் திருப்புகழில்,

மகர வெங்கருங் கடலொ டுங்கிட

     நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற

          வனச னின்றழும் படிநெ ருங்கிய  வொருசூதம் 

அடியொ டும்பிடுங் கியத டங்கர

மகர மீன்கள் உள்ளதுமான வெப்பமுள்ள கரிய கடல் (மகர வெங்கருங்கடல்) ஒடுங்கி அடங்கவும் (ஒடுங்கிட) அவுணன் சூரனுடைய (நிசிசரன்) பெரிய சுற்றங்கள் முழுது அழிவுபடவும் (பெருங்குலமொருங்கிற) பிரமதேவன் (வனசன்) பயந்து நின்று அழுது ஓலிடும்படி நெருங்கி வந்த (நின்றழும்படி நெருங்கிய) ஒப்பற்ற மாமரத்தை (ஒரு சூதம்) அடியோடு பிடுங்கிப் பிளந்தெறிந்த (அடியொடும் பிடுங்கிய) பெருமை வாய்ந்த திருக்கரத்தை உடையவனே (தடம் கர)   

Comments