கந்தர் அந்தாதி – செய்யுள் 30

தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த

தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்

தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே

தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே


பதம் பிரித்த வடிவம்:


தெய்வ மண் அம்பு உணர் தீ கால் வெளி செய்த தே வரைந்தது

எய்வ; மண் அம் புள் நராரிக்கு மருக; செச்சை அம் தார்

தெய்வ; மணம் புணரும் குழலாளைத் தினைப்புனத்தே

தெய்வ மணம் புணர் கந்தன் என்னீர் உங்கள் தீதறவே


பொருள்:

தெய்வ மண் அம்பு உணர் தீ கால் வெளி செய்த தே வரைந்தது எய்வ

தெய்வ – மற்ற தேவர்களையும்

மண், அம்பு – பூமி, நீர்

உணர் – அந்தக்கரணங்கள்

தீ, கால், வெளி – நெருப்பு, காற்று, ஆகாயம் (இவற்றையும்)

செய்த தே – படைத்த பிரமன்

வரைந்தது எய்வ – நம் தலைமேல் எழுதியதை முருகன் துதிகள் அழித்துவிடும்


மண் அம் புள் நராரிக்கு மருக

மண் – மாசற்ற

அம் – அழகிய

புள் நராரிக்கு மருக – கருட வாகனனாகிய நரசிம்மரின் மருகனே!


செச்சை அம் தார் தெய்வ

செச்சை அம் தார் தெய்வ – அழகிய வெட்சி மாலை அணிந்த தெய்வமே


மணம் புணரும் குழலாளைத் தினைப்புனத்தே தெய்வ மணம் புணர் கந்தன் என்னீர்

மணம் புணரும் – நறுமணம் வீசும்

குழலாளை – கூந்தலை உடைய வள்ளியை

தினைப்புனத்தே – தினைப்புனத்தில்

தெய்வ மணம் புணர் – கந்தர்வ மணம் செய்து கொண்ட

கந்தன் என்னீர் – குமாரக்கடவுளே எனத் துதியுங்கள்

 

உங்கள் தீதறவே

உங்கள் தீது அறவே – உங்கள் தீவினை எல்லாம் ஒழியும்படி


பொழிப்புரை:

கருட வாகனனாம் மாலோன் மருகனே! அழகிய வெட்சி மாலை அணிந்த தெய்வமே! நறுமணம் வீசும் கூந்தலை உடைய வள்ளியை, தினைப்புனத்தில் கந்தர்வ மணம் செய்துகொண்ட குமரக் கடவுளே! என்றெல்லாம் முருகனைப் போற்றித் துதித்தால், அத் துதி, நம் தலையில் எழுதப்பட்டிருக்கும் அயன் கையெழுத்தை அழித்துவிடும்.


சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில்; தேங்கடம்பின்

மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்; மாமயிலோன்

வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்; அவன்

கால்பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே

கந்தர் அலங்காரம் - 40

Comments