கந்தர் அந்தாதி – செய்யுள் 28

சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே

சிக்குறத் தத்தை வடிவே லனார்சில ரன்பர்செந்தாள்

சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்

சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே


பதம் பிரித்த வடிவம்:

சி குறு அத்தத்தை வழங்காது இழந்து தியங்குவர்

(தே)சு இக்குற தத்து ஐ வடிவேல் எனார் சிலர், அன்பர் செந்தாள்

சிக்குற, தத்தை கடிந்து ஏனல் காக்கும் சிறுமி

(குறிஞ்)சிக் குறத்து அத் தையல் நகில் எப்போதும் திகழ்புயனே


பொருள்: 

சி குறு அத்தத்தை வழங்காது இழந்து தியங்குவர் தேசு இக்குற

சி – இகழ்ச்சிக்கிடமானதும்

குறு – குறைந்து போவதுமாகிய

அத்தத்தை வழங்காது – செல்வத்தை நல்ல வழியில் தர்மம் செய்யாமல்

இழந்து – பல வழிகளிலும் அதைத் தொலைத்து

தியங்குவர் – வருந்துவார்கள்

தேசு இக்குற – தமது புகழ் நலியும்படி (வறுமையால் வாடுவார்கள்)

 

இகழ்ச்சிக்கிடமானதும் குறைந்து போவதுமாகிய செல்வத்தை நல்வழியில் பலருக்கும் தர்மம் செய்யாமல், பல வழிகளிலும் அதனைத் தொலைத்து வருந்துவார்கள்; தமது புகழ் நலியும்படி வறுமையால் வாடுவார்கள்.

 

தத்து ஐ வடிவேல் எனார் சிலர், அன்பர் செந்தாள் சிக்குற

(அன்பர் செந்தாள் சிக்குற தத்து ஐ வடிவேல் எனார் சிலர்) 

அன்பர் – உன் வேலாயுதத்தைப் போற்றும் அடியார்கள்

செந்தாள் – உன் சிவந்த திருவடிகளை

சிக்குற – உறுதியாகப் பற்றிக் கொள்ளக் கண்டும் கூட

தத்து ஐ வடிவேல் எனார் சிலர் – சிலர் விளக்கமுற்ற அழகிய உன் வடிவேலைத் துதிக்க மாட்டார்கள்


உன் வேலைப் போற்றும் அடியார்கள், உன் திருவடிகளைப் பற்றிக்கொள்கிறார்கள்; அதைக் கண்டும் சிலர், உன் அழகிய வேலைத் துதிக்காமலிருக்கிறார்கள்.

 

தத்தை கடிந்து ஏனல் காக்கும் சிறுமி குறிஞ்சிக் குறத்து அத் தையல் நகில் எப்போதும் திகழ் புயனே!

தத்தை கடிந்து – [தினைப் பயிரை உண்ண வந்த] கிளிகளை ஓட்டி

ஏனல் காக்கும் – தினைப்புனத்தை ரட்சிக்கும்

சிறுமி – சிறு பெண்ணும்

குறிஞ்சிக் குறத்து அத் தையல் – குறிஞ்சி நிலத்தில் வாழ்பவளுமாகிய அந்த வள்ளி நாயகியின்

நகில் – மார்பின் சுவட்டால்

எப்போதும் திகழ் புயனே – எக்காலமும் பிரகாசிக்கின்ற புயத்தை உடைய கந்த வேளே!

[சிலர் உன் வடிவேலைப் போற்றுவதில்லை]

தினைப்பயிர்களைக் கொத்த வந்த கிளிகளை விரட்டி, அப் புனத்தைக் காக்கும் சிறியவளும் குறிஞ்சி நிலத்தில் வாழ்பவளுமான அந்த வள்ளியின் மார்பு சுவடு எக்காலமும் பிரகாசிக்கின்ற புயத்தை உடைய கந்தனே! 


பொழிப்புரை:

வேடர் செழுந்தினை காத்து இதண் மீதிலிருந்த பிராட்டியாம் வள்ளி நாயகியின் கொங்கைச் சுவடுகள் திகழும் புயத்தனே! உன்னிடம் அன்பு பூண்டவர்கள், உன் வேலாயுதத்தைத் துதித்து, உன் திருவடிகளைச் சேர்வதைக் கண்டும் கூட, சிலர், வேலைப் போற்றி, நிலையற்ற தம் செல்வத்தை நல்ல வழியில் தர்மம் செய்து உய்யாமல், அதை இழந்து வறுமையில் வாடுகின்றனர்.


“வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்”
– என்று பாடுகிறார் அருணகிரிநாதர். (கந்தர் அலங்காரம் 18)

Comments