கந்தர் அந்தாதி – செய்யுள் 15

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்

திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்

திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்

திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே

பதம் பிரித்த வடிவம்:

திவாகர கன்ன கொடைப்பாரி என்று உழல் தீன அல் ஈர்

திவாகர; கன்னபுரக்குழை வல்லி செருக்கு உர;

(அந்)தி வாகு அர கன்ன சுக வாசக; திறல் வேல் கொடு என்

(புந்)தி வா; கர கன்ன மறலி இடாது உயிர்ச் சேவலுக்கே

பொருள்:

இந்தப் பாடலில், யமன் வந்து நம் உயிரைக் கொண்டு போகாமல், நம்முடைய இதயத்தில் முருகன் வந்தமர்ந்து காவல் செய்தருளுமாறு வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

முருகனை இவ்வாறெல்லம் அழைக்கிறார்.

1.   திவா கர கன்ன, கொடைப்பாரி என்று உழல் தீன அல் ஈர் திவாகர

2.   கன்ன புரக் குழை வல்லி செருக்கு உர

3.   அந்தி வாகு அர கன்ன சுகவாசக

1.   திவா கர கன்ன, கொடைப்பாரி என்று உழல் தீன அல் ஈர் திவாகர

திவா – பகல் நேரத்தில் தானம் கொடுக்கும்

கர கன்ன – கையை உடைய கர்ணனே

கொடைப்பாரி – பாரி போன்ற கொடை வள்ளலே

என்று உழல் – என்றெல்லாம் பலரிடத்தும் பேசி, உழல வைக்கும்

தீன – வறுமை

அல் – (என்னும்) இருளை

ஈர் – அழிக்க வல்ல

திவாகர – ஞான சூரியனே

“கர்ணனே! பாரியே!” என்றெல்லாம் பலரிடமும் சென்று அவர்களைப் புகழ்ந்து பேசி, அடியேனை உழலவைக்கும் வறுமை என்னும் இருளை நீக்க வல்ல ஞான சூரியனே.

2.   கன்ன புரக் குழை வல்லி செருக்கு உர

கன்னபுரக்குழை – கர்ணபூரம் என்னும் ஆபரணத்தை அணிந்துள்ள

வல்லி – வள்ளி நாயகி

செருக்கு – பெருமிதத்துடன் தழுவும்

உர – மார்பு உடையவனே

கர்ணபூரம் என்னும் ஆபரணத்தை அணிந்துள்ள வள்ளி, பெருமிதத்துடன் தழுவும் மார்பனே.

3.   அந்தி வாகு அர கன்ன சுகவாசக

அந்தி வாகு – மாலைப் பொழுதின் நிறத்தை உடைய

அர – அரன் – சிவபெருமானின்

கன்ன – கர்ணம் - காதில்

சுகவாசக – இனிமையாக பிரணவத்தை உபதேசித்தவனே

மாலை நேரத்தின் நிறம் உடைய சிவபெருமானின் செவியில், இனிமையாக, பிரணவத்தை உபதேசித்தவனே.

“…… பரமன(து) இருசெவி ……  களிகூர

உரைசெயும் ஒரு மொழி பிரணவ முடிவதை

உரைதரு குருபர….” [அரகர சிவன் – திருத்தணி]

 

“அகரப்பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானதின் பொருள்

அரனுக்(கு) இனிதா மொழிந்திடு …... குருநாதா”

[பகர்தற்கரிதான – பழநி]

 

இப்போது வேண்டுதலை முன் வைக்கிறார்.

திறல் வேல் கொடு என் புந்தி வா; கர கன்ன மறலி இடாது உயிர்ச் சேவலுக்கே: 

திறல் வேல் கொடு என் புந்தி வா: 

திறல் வேல் கொடு – வலிமை மிக்க வேலாயுதத்தை ஏந்தி

என் புந்தி வா – என்னுடைய இதயத்தில் வீற்றருள வா

வலிய வேலாயுதத்தோடு என் இதயத்தில் இருக்க வா. 


எதற்காக?


கர கன்ன மறலி இடாது உயிர்ச் சேவலுக்கே:

கர – ஒளிந்து கொண்டு / மறைந்து கொண்டு

கன்ன – எடுத்தல் / கவர்தல்                       

மறலி – யமன்

இடாது – கவராது

உயிர் – உயிரை

சேவலுக்கே – காப்பதற்காகவே [சேவல் – காத்தல்]

யமன், ஒளிந்து இருந்து என் உயிரைக் கொள்ளைக் கொள்ளாதபடி காப்பதற்காக.

“அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில்

     அஞ்சல் என வலிய                             மயில்மேல் நீ

அந்த மறலியொ(டு) உகந்த மனிதன் நம(து)

    அன்பன் என மொழிய                               வருவாயே”

[தந்த பசிதனை – திருச்செந்தூர்]

பொழிப்புரை:

வறுமையினால் செல்வந்தர்களிடம் சென்று, அவர்களைப் புகழும் புன் தொழிலை ஒழிக்கவல்ல ஞான சூரியனே! வள்ளி லோலனே! சிவபெருமானுக்கு உபதேசித்தவனே! என் உயிரை எமன் சூறை கொள்ளாதபடி என் இதயத்தில் நீ வீற்றிருக்க வேண்டும். 

Comments