கந்தர் அந்தாதி – செய்யுள் 4
தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே
பதம் பிரித்த வடிவம்:
தேமொழி அத்தம் பெற ஓம் தனக்கு அன்று சேணுலகத்
தேம் ஒழியத் தம் சினம் காட்டு அவுணரைச் சே மகரத்
தேம் மொழி அத்தம் புயம் அவர் சூடிகை சிந்த வென்ற
தே மொழி அத்தம் பதினாலு உலகும் அந்தித்தது ஒன்றே
பொருள்:
முதல் மற்றும் நான்காம் வரிகளில் – முருகன் ப்ரணவ உபதேசம் செய்த பெருமை சொல்லப்படுகிறது.
இரண்டு மற்றும் மூன்றாம் வரிகளில் – சூரபத்மன் முதலான அசுரர்களை முருகன் அழித்த விதம் சொல்லப்படுகிறது.
தேமொழி அத்தம் பெற ஓம் தனக்கு
தேமொழி – தேன் போன்ற இனிய மொழியை உடைய பார்வதியின்
அத்தம் – பாதியாகிய சிவபெருமான் (அர்த்தம் – அத்தம் – பாதி)
பெற – உபதேசம் பெற்றுக் கொள்ளும்படி
ஓம் – ப்ரணவத்திற்கு
தேன் போன்ற மொழி உடைய பார்வதியின் பாதியாகிய சிவபெருமான், ப்ரணவத்திற்கு உபதேசம் பெற்றுக்கொள்ளும்படி…
அன்று சேணுலகத் தேம் ஒழியத்
அன்று – முன்னொரு காலத்தில்
சேண் உலக – தேவ லோகத்தின்
தேம் ஒழிய – நலன் எல்லாம் அழியும்படி
முன்பு, தேவலோகத்தின் நலன்கள் யாவும் அழியும் படி…
தம் சினம் காட்டு அவுணரைச்
தம் – தம்முடைய
சினம் – கோபத்தை
காட்டு – காட்டிய
அவுணரை – சூரபத்மன் முதலான அசுரர்களை
தம்முடைய கோபத்தைக் காட்டிய சூரபத்மன் முதலான அசுரர்களை…
சே மகரத் தேம்
சே – ஆண்
மகர – சுறாக்கள்
தேம் – வாழும் இடமாகிய சமுத்திரத்தில்
ஆண் சுறாக்கள் வாழும் இடமாகிய சமுத்திரத்தில்…
மொழி அத்தம் புயம் அவர் சூடிகை சிந்த வென்ற தே
மொழி அத்தம் – கணுக்களை உடைய கைகளும்
புயம் – தோள்களும்
அவர் சூடிகை – அவர்களுடைய தலைகளும்
சிந்த – நிலத்தில் வீழும்படி
வென்ற – அவர்களை வென்று அழித்த
தே – குமரக் கடவுள்
அவர்களது (அசுரர்களுடைய) கணுக்களை உடைய கைகள், தோள்கள், தலைகள் எல்லாம் மண்ணில் விழுந்து அழியும் படி செய்து, வெற்றி பெற்ற குமரக் கடவுள்
மொழி அத்தம் பதினாலு உலகும் அந்தித்தது ஒன்றே
மொழி அத்தம் – உபதேசித்த பொருள் (அர்த்தம்)
பதினாலு உலகும் – பதினான்கு உலகிலும்
அந்தித்தது ஒன்றே – ஒரே தன்மையாகப் பொருந்தி இருக்கிறது.
சிவபெருமான் கேட்க, முருகன் உபதேசித்த ப்ரணவத்தின் பொருள், ஈரேழு உலகிலும் நிலைத்த பெருமையுடன் இருக்கிறது.
முருகன், சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை சுவாமிமலையில் உபதேசித்ததை, அருணகிரிநாதர் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
சில எடுத்துக்காட்டுகள்:
1. சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா (சிவனார் மனம் குளிர - பழநி)
2. பரமனது இருசெவி களிகூர உரைசெயும் ஒருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர (அரகர சிவன் அரி - திருத்தணி)
பொழிப்புரை:
தேவலோகத்தின் நலன்களை எல்லாம் தம் சினத்தால் அழித்த சூரபத்மாதி அசுர்ரகளை மண்ணில் விழுந்து மடியச் செய்த குமரக் கடவுள், பார்வதி பங்கரான சிவபெருமான் கேட்டுக்கொண்டதன் பேரில் உபதேசித்த ப்ரணவத்தின் பொருள், பதினான்கு உலகிலும் ஒரே தன்மையாக நிலைத்திருக்கிறது.
.jpg)
Comments
Post a Comment