கந்தர் அந்தாதி – செய்யுள் 1
பதம் பிரித்த வடிவம்:
இந்தப் பாடலில், முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆறு திருப்பதிகள் பற்றிப் பாடுகிறார்.
திரு – லக்ஷ்மி தேவி
திரு ஆவி – லக்ஷ்மி தேவியின் நாயகனான திருமால்
நன்குடி – நல்ல பெண் தெய்வமான உமை
நன்குடி பங்காளர் – உமைக்குத் தன் இடப்பாகத்தைக் கொடுத்த சிவபெருமான்
எண் முது சீர் உரை சதிர் உவாவினன் குடி – திருமாலும் சிவனும் மதிக்கும் பழைமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய சாமர்த்தியம் உடைய முருகப்பெருமான் வாசம் செய்யும் இடம்
1. வானார் பரங்குன்று – வானளாவும் திருப்பரங்குன்றம்
2. சீர் அலைவாய் – பெருமை மிகுந்த திருச்செந்தூர்
3. திரு ஆவினன்குடி – பழநி மலை அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோயில். தாழக்கோயில் என்று அழைக்கப்படும்.
4. ஏரகம் - சுவாமிமலை
5. குன்றுதொறாடல் – திருத்தணி முதலான பல குன்றுகள்
6. சென்று அதிர் உவா இனன் குடி கொண்ட தண் கார் வரை – பூமி அதிரும் படி நடக்கும் யானைக்கூட்டங்கள் வாழ்கின்ற குளிர்ந்த, கரு மேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலை
செப்புமினே – ஆகிய ஆறு தலங்களையும் துதி செய்வோமாக.
திருவாவினன்குடி என்பதற்கு, இரண்டு பெயர்க்காரணம் சொல்வதுண்டு.
1. திருவாவினன்குடி என்பதை திரு + ஆ + இனன் + கு + டி என்று எடுத்துக் கொண்டால், திரு = லக்ஷ்மி தேவி, ஆ = காமதேனு, இனன் = சூரியன், கு = பூமி தேவி, டி = அக்னி ஆகியோர் வழிபட்ட தலம். ஆதலால் திருவாவினன்குடி என்று பெயர் பெற்றது.
2. வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் பின்வருமாறு இதற்கு விளக்கம் தந்துள்ளார்.
கடையேழு வள்ளல்களுள் ஒருவர் பேகன். இவனுடைய முழுப்பெயர் “வையாவிக் கோப்பெரும் பேகன்” என்பதாகும். ஆவியர் என்னும் குலத்தில் பிறந்தவன் அவன். அந்த ஆவியர் குலத்தினர் தமக்குத் தலைநகராகக் கொண்ட ஊரே ஆவினன்குடி. ஆவிக்கு நல்ல ஊராக இருப்பது என்பது அதன் பொருள். ஆவி நன்குடி என்பதே ஆவினன்குடி என்றாகிவிட்டது.
பொழிப்புரை:
திருமாலும் சிவனும் பெரிதும் மதிக்கும்படி பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருள் உரைத்த சாமர்த்தியம் உடைய முருகப்பெருமான் வாசம் செய்யும் திருப்பதிகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, குன்றுதொறாடல், பழமுதிர்சோலை ஆகியவற்றைத் துதி செய்வோமாக.
பின் குறிப்பு:
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில், மேல் கூறிய ஆறு தலங்கள் முறையே சொல்லப்படுகின்றன. ஆற்றுப்படைத் தலங்கள் என்றே அவை அழைக்கப்படுகின்றன. எண்ணிக்கை ஆறு என்று இருப்பதால், இன்று நாம் அவற்றை ஆறு படைத் தலங்கள் / ஆறு படை வீடு என்று கூறுகிறோம். படை வீடு என்றால், போர் புரியும் வீரர்கள் தங்கும் இடம் (பாசறை). மேற்கூறிய தலங்களில், திருச்செந்தூருக்கு மட்டுமே இது பொருந்தும். மற்ற தலங்களுக்கு, இப்பெயர் (படைவீடு) பொருந்தா.
ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் / நெறி படுத்துதல் என்று பொருள். புலவர் ஒருவர், பொருள் பெற வேண்டும் என்றால், ஒரு அரசனிடம் சென்று, அவனைப் பற்றிப் பாடிப் பரிசு பெறுவார். அந்தப் புலவர், மற்றொரு புலவரிடம் சென்று, தான் பரிசு பெற்று வந்த விதத்தைப் பற்றிக் கூற, அந்தப் புலவரும் அவ்வாறே செல்வார். இவ்வாறு பாடப்பெறும் பாடலே ஆற்றுப்படை எனப்படும். ஒரு புலவரை, மற்றொரு புலவர் வழிப்படுத்துவதால், ஆற்றுபடை, என இந்த வகைப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன. முருகப்பெருமானை மன்னனாக (பாட்டுடைத்தலைவனாக) வைத்துப் பாடி, நம்மை வழிப்படுத்துவதால், திருமுருகாற்றுப்படை என்று இந்நூல் வழங்கப்படுகிறது.
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற நூல்களும் இவ்வகையைச் சார்ந்தவையே.
குமரகுருபரர் அருளிய கந்தர் கலி வெண்பாவில்,
என்று வருகிறது.
ஈனமிகுத்துள எனத் தொடங்கும் திருப்புகழில் “ஆறு திருப்பதியில் வளர் பெருமாளே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.
ஆறுபடை வீடு என்று ஆன்றோர்கள் சொல்லவில்லை. பேச்சுவழக்கில் ஆற்றுப்படை என்பதே மருவி ஆறுபடை என்றானது.
இனி, ஆறுபடை வீடு என்று சொல்லி வந்த திருக்கோயில்களை, ஆற்றுப்படை வீடு / ஸ்தலம் என்றே சொல்லுவோம்.
.jpg)
Comments
Post a Comment